சனி, 15 டிசம்பர், 2018

புருஷாமிருகம்

திருக்கார்த்திகை திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவத்தில் பிறைசூடிய பெம்மானை (சந்திரசேகரர்) சுமந்து வரும் பேறு பெற்றது, புருஷாமுனி வாகனம். மனிதன் பாதி, விலங்கு பாதி இரண்டும் சேர்ந்த கலவையாய் உருவான படிமங்களுள் ஒன்று புருஷாமிருகம் - மேல்பாதி மனிதன், கீழ் பாதி புலி.

புருஷாமிருக வாகனம்

ராஜகோபுரத்தின் வழியாக அங்கு இருக்கும் 'செல்வக் கணபதியைக் கைதொழுது' ஐந்தாம் திருசுற்றில் நுழைந்தவுடன், திரும்பி ராஜகோபுரத்தின் பின் சுவரை பாருங்கள். வாசலின் தென்புறம் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பம் ஒன்றைக் காணலாம்.

புருஷாமிருகம் ராஜகோபுரம்

கிரீடம், தாடி மீசையுடன் முனிவர் முகம். முகத்தில் புன்னகை. இரு புலிக்கால்களில் நின்று விலங்கு போல் முன்புறம் நீண்ட உடல். தூக்கிய வால். வலது கையில் தீபமும், இடது கையில் மணி ஏந்தி பூசனை செய்யும் கோலம்.

கோயிலின் பல தூண்களில், சுவர்களில் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன - திட்டிவாசல் தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், கார்த்திகை மண்டப தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், வளைகாப்பு மண்டப வடமேற்கு மூலைத் தூணின் போதிகையில்.

திட்டி வாசல் தெற்கு பக்கத் தூண்

புருஷாமிருகத்தின் கதை சொல்லும் புடைப்புச் சிற்பத்தை கம்பத்திளையனார் கோயிலின் தெற்குப் பக்க வெளிச்சுவரில் (வளைகாப்பு மண்டபம் அருகில்) காணலாம்.

புருஷாமிருகமும் பீமனும்

மேலேயுள்ள சிற்பத்தில் புருஷாமிருகம் துரத்திச்செல்வது பீமனை. நடுவில் ஒரு லிங்கம். பாண்டவர்கள் குருக்ஷேத்திரப் போரில் வென்ற பிறகு ராஜசூய யாகம் செய்தார் தர்மர். அந்த யாகத்திற்கு புருஷாமிருகத்தின் வருகை தேவைப்பட்டது.  அழைத்துவரும் பணியை பீமனிடம் ஒப்படைத்தார் தர்மர். புருஷாமிருகத்தின் ஆற்றலை அறிந்த பீமன், கண்ணனிடம் ஆலோசனை கேட்டான். அவர் 12 ருத்திராட்சங்களை அளித்தார். தன்னை யாகத்திற்கு அழைத்த பீமனிடம் தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்லவேண்டும் என்றும், தோற்றவர் வென்றவருக்கு அடிமை என்றும் நிபந்தனை போட்டது புருஷாமிருகம். சலுகையாக பீமன் 4 காத தூரம் ஓடிய பிறகே அது ஓட ஆரம்பித்தது. ஆனால், சிறிது நேரத்தில் இடைவெளி குறைந்து பீமனை நெருங்கிவிட்டது. கண்ணனின் திட்டப்படி பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட அது சிவலிங்கமாக மாறியது. பெரும் சிவபக்தராகிய புருஷாமிருகம் ஓடுவதை நிறுத்திவிட்டு சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தது. மீண்டும் ஓடத் துவங்கி பீமனை நெருங்கியது. பீமன் இன்னொரு ருத்திராட்சத்தை கீழே போட அதுவும் சிவலிங்கமாகி புருஷாமிருகம் ஓடுவதை நிறுத்திவிட்டு பூஜை செய்தது. இப்படி 12 ருத்திராட்சங்களை தரையில் வீசி புருஷாமிருகத்தின் ஓட்டத்தைத் தடை செய்த பீமன் இலக்கை நெருங்கி விட்டான். ஒரு கால் இலக்கு கோட்டைத் தாண்டிய நிலையில், புருஷாமிருகம் அவனைப் பிடித்துவிட்டது. ஒரு கால் இலக்கைத் தாண்டி விட்டதால் தான் வென்றதாக பீமனும், முழுமையாக இலக்கைத் தாண்டாததால் தானே வென்றதாக புருஷாமிருகமும் வாதிட்டனர். வழக்கு தர்மரிடம் சென்றது. அவர் பீமனின் ஒரு கால் இலக்கைத் தாண்டாததால் அவனது பாதி உடல் புருஷாமிருகத்திற்கு அடிமை என்று தீர்ப்பளித்தார். பாரபட்சமற்ற அவரது தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்து ராஜசூய யாகத்திற்கும் வர சம்மதித்தது என்று முடிகிறது கதை.

இந்த ஓட்டப் பந்தயக் கதையின் இன்னொரு வடிவமும் உள்ளது. 

குமரி மாவட்ட சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை "கோவிந்தா, கோபாலா" என்று முழக்கம் இட்டபடி ஓடி தரிசிப்பதுதான் சிவாலய ஓட்டம். அதற்கு காரணமாக கூறப்படும் கதைகளில் ஒன்று பீமன் புருஷாமிருகம் கதை. கண்ணன் அளித்து பீமன் கீழே போட்ட 12 ருத்திராட்சங்களில் இருந்து உருவான 12 சிவலிங்கங்களை கொண்டவையே இந்த 12 கோயில்கள் என்பது தல வரளறுகளுள் ஒன்று. அந்த 12 தலங்கள் திருமலை, திக்குறிச்சி, திப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதங்கோடு, திருபன்றிக்கோடு, திருநட்டாலம் என்பன ஆகும்.

பவானி சங்கமேஸ்வரர் கோயில்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் ராஜகணபதி சன்னிதி
வாயிலின் மேல் கஜலக்ஷ்மியின் இடத்தில்
புருஷாமிருகம், பீமன் ஓட்டப்பந்தய சிற்பம்



துணை:
  1. https://tamil.oneindia.com/astrology/news/sivalaya-ottam-2018-pilgrimage-on-maha-shivaratri-311157.html
  2. https://ta.wikipedia.org/wiki/சிவாலய_ஓட்டம்



1 கருத்து:

  1. திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள புருஷாமிருகம் சிற்பத்தின் பின்புல கதையை மிகத் தெளிவாக விவரித்த பாங்கு அருமை. புருஷாமிருகம் - பீமன் கதை, அதன் தொடர்ச்சியாக குமரியில் தோன்றிய 12 சிவத் திருத்தலங்கள் பற்றிய விபரம் சிறப்பு.
    அருமையான முயற்சி. தொடரவும்.

    பதிலளிநீக்கு