சனி, 22 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் - 1: அறிமுகம்

ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஐந்தாம் திருச்சுற்றில் இடதுபுறம் கம்பத்திளையனார் சந்நிதி. அதன் பின்னால் சிவகங்கை திருக்குளத்தின் வடக்கே இருக்கும் 16 கால் மண்டபம்தான் வளைகாப்பு மண்டபம்.


வளைகாப்பு மண்டபம்

இது திருக்கோயிலில் உள்ள எழிலார்ந்த மண்டபங்களில் ஒன்று. ஆடி மாதம் நிகழும் பத்துநாள் பராசக்தி உற்சவத்தின் இறுதி நாளான ஆடிப்பூரத்தினன்று இந்த மண்டபத்தில்தான் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும்.

தற்போது மண்டபம் இரும்பு வேலியால் மூடப்பட்டு நுழைவு வாயில் மேற்கு நோக்கி உள்ளது. அங்கு உள்ள நான்கு கற்படிகள் பிற்கால இணைப்புகளாகத் தோன்றுகின்றன. வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிலைகள் தெற்கே உள்ளன. எனவே இந்த மண்டபம் தெற்கே சிவகங்கை திருக்குளத்தை நோக்கி அமைக்கப்பட்டது என்று கருதலாம்.

1. சதுரமான அதிஷ்டானம் எனப்படும் தாங்குதள மேடை. 



தாங்குதளத்தின் 'கண்டம்' என்னும் கழுத்துப் பகுதியில் சிற்ப வரிசை இருப்பதைக் காணலாம், 

2. அதன் மீது வெளிச் சுற்றில் 12 தூண்கள்.   

3.பிரஸ்தரம் எனப்படும் மண்டபக்கூரை. அதன் வெளிப்புறம் கூரையின் ஓரத்தில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டுள்ள வளைந்த அமைப்பு (1) கபோதம் எனப்படும். அதன் மீது கொடிக் கருக்கு அலங்காரங்கள் உள்ளதை காண்க. கபோதத்தின் மீது உள்ளது யாளி வரி (2). அதில் யாளிகளும் சிங்கங்களும் வரிசையாய் செதுக்கப் பட்டுள்ளதைக் காண்க. தூண்கள் மீது அமர்ந்து கூரைப்பலகைகளைத் தாங்கும் உத்தரங்களும் வெறுமையாக இல்லாமல் இலைக்கருக்கு அணியால் அழகு செய்யப்பட்டிருப்பதைக் காண்க.



மண்டபத்தின் நடுவே சதுரமான கொலுமேடை. தாங்குதளம், அதன் 4 மூலைகளிலும் 4 தூண்கள், கூரை



மேடை மீதுள்ள கூரைப்பகுதி சுற்றியுள்ள கூரையைவிட உயர்ந்துள்ளது. அதன் நடுவில் பூ அலங்காரச் சிற்பம். சுற்றி இரும்பு வளையங்கள்.



வளைகாப்பு மண்டபத்தின் 16 தூண்களும் அழகிய சிற்பங்களால் அணிசெய்யப் பெற்றவை.

வளைகாப்பு மண்டபத்தினுள்  தெய்வச் சந்நிதி இல்லை. இருந்தாலும் மண்டபங்களுக்கு உரித்தான மேற்கண்ட மூன்று உறுப்புகளுடன் கூட, தெய்வச் சந்நிதிகளுக்கே உரித்தான விமானம் இந்த மண்டபத்தின் மீது அமைந்திருப்பது ஏன்?

அருணகிரிநாதருக்கும் சம்பந்தாண்டாருக்கும் இடையே பிரபுட தேவராயன் அவையில் ஏற்பட்ட வாதத்தில் முன்னவரின் அழைப்பை ஏற்று முருகர் வளைகாப்பு மண்டபத்தின் வடகிழக்கு மூலைத் தூணில்தான் காட்சி அளித்தார். இந்நிகழ்வின் அடையாளமாக அத்தூணில் உள்ள முருகரின் புடைப்புச் சிற்பம்தான் கம்பத்திளையனாராக வழிபடப் படுகிறது. அதன் காரணமாகவே இந்த மண்டபத்தின் மீது விமானம் அமைந்துள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக