ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்புமிக்க கொற்றவை (துர்க்கை) சிற்பங்கள் ராஜகோபுரத்தை அடுத்து உள்ள வளைகாப்பு மண்டபத்தில் அமைந்துள்ளன. 

மகிஷனுடன் போருக்கு எழும் கொற்றவை

தென்மேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வால் தூக்கி, விரைந்து நடக்கும் சிங்கத்தின் மேல் அமர்ந்து கைகளில் சங்கும், சக்கரமும். கேடயமும், ஓங்கிய வாளுமாக போருக்கெழும் துர்க்கை. 


வளைகாப்பு மண்டபம்

மகிஷனுடன் போரிடும் துர்க்கை 

வடமேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வழக்கமான தூண் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் ஏறத்தாழ தனிச்சிற்பமாகவே உள்ளது இதன் ஒரு சிறப்பு.

வளைகாப்பு மண்டபம்

வளைகாப்பு மண்டபம்

யானை ஒன்றின் தலையை துர்க்கையின் வாகனமாகிய சிம்மம் முன்னிரு கால்களாலும், அதன் முதுகை இடது பின்னங்காலாலும்  பிடித்திருக்கிறது. சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள துர்க்கை பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளாள். முன் இடது கை வில்லைப் பிடித்திருக்க, முன் வலது கை பின் நோக்கி வளைந்து அம்பராத்தூணியிலிந்து அம்பை எடுக்கிறது. 

சிங்கம் மீதமர்ந்து வில்லேந்தி அம்பெடுக்கும் கொற்றவையின் உடல் அமைதி மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை சுவர் சிற்பத்தின் துர்க்கையின் உடல் அமைதியைத் தழுவியுள்ளது. 

மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை 

அதில் துர்க்கைகு எட்டு கைகள், கணங்களும் அசுரர்களுமான போர்க்கள காட்சி என மற்ற விவரங்கள் வேறுபட்டாலும், துர்க்கையின் அடிப்படை உடல் அமைதி இரு சிற்பங்களிலும் ஒன்றே. சமகால படைப்புகளில் உருவ அமைதி ஒத்திருப்பது வழக்கம்தான். மாமல்லை சிற்பம் 7 ஆம் நூற்றாண்டில் உருவானது, திருவண்ணாமலை திருக்கோயில் சிற்பமோ ஒன்பது நூற்றாண்டுகள் பிந்தையது  என்னும்போது இந்த ஒற்றுமை வியப்புக்குறியது. பெண் தெய்வ உருவங்களை தடமுலைகளோடு அமைப்பது மரபாக இருக்கும்போது, திருவண்ணாமலை துர்க்கையின் சிறுத்த முலைகள் வியப்பை அளித்தது. பேராண்மையின் வெளிப்பாடோ? இதே மண்டபத்தில் உள்ள கீழே பதிவடப்பட்டுள்ள மற்ற இரண்டு துர்க்கை சிலைகளை ஒப்பிடும்போது இந்த வேறுபாடு தெளிவாகத் தெரியும். இதிலும் மகாபலிபுரம் துர்க்கையோடு ஒற்றுமை தெரிகிறது.

மேலும் திருவண்ணாமலை சிற்பம் யானையை பயன்படுத்தி சிங்கம், அதன்மீது அமர்ந்துள்ள துர்க்கை இருவரின் பேருருவத்தை நமக்குக் காட்டுகிறது.

'மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை' படம் - மூலம்:

https://commons.wikimedia.org/wiki/File:Mahabalipuram_Mahishasura_1.jpg#filelinks

கொற்றவையின் போர் நடனம்

தென்மேற்கு மூலைத் தூணின் தெற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். நரசிம்மம் நிகழ்த்தும் இரண்யவதத்தை ஒத்த காட்சி.

வளைகாப்பு மண்டபம்

துர்க்கையின் இடதுகால் எருமையாகிய மகிஷனின் தலையை தரையோடு அழுத்தியுள்ளது. மற்றோரு கால் அவன் முதுகின்மேல். ஒரு கை எருமையின் வாலைபற்றி இழுக்க, வலது கை ஒன்றில் ஏந்திய குறு வாள் எருமையை குத்தி வெளிவருகிறது. இரு கைகளால் ஓங்கிய திரிசூலம் எருமையை குத்தித் துளைத்துக்கோண்டிருக்கிறது. மற்ற 4 கரங்களில் சக்கரம், தீ, சங்கு, கேடயம்.  நடராஜரையும், நரசிம்மரையும் ஒத்த ஒரு நடன அமைதி இந்த சிற்பத்தில் வெளிப்படுகிறது.

அவுணன்  தலைமிசை நின்ற தையல்

தீபதரிசன மண்டபத்தில் உள்ள தூண் சிற்பம் இது.


தீபதரிசன மண்டபம்

போர்வெறி தணிந்து மகிஷன் தலை மீது நின்று பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி, முன் இடது கையை தொடையில் ஊரு ஹஸ்தமாய் ஊன்றி, வலது கையை அபய ஹஸ்தமாய் காட்டி அருள் புரியும் அன்னை. சக்கரமும், சங்கும் வழக்கமான இடம் மாறி இருக்கின்றன.

"இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்"         - சிலப்பதிகாரம் 

(எருமைத் தலையும் மனித உடலும் ஆக இரண்டு வேறு உருவங்களின் கலவையான, திரண்ட தோள்களை உடைய அசுரன்  (அவுணன்) மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நின்ற பெண்)

அருள்பாலிக்கும் அன்னை

அசுரனை ஒழிந்து தன் சிங்க வாகனம் பின்னே நிற்க வலது முன்கரத்தில் அபய ஹஸ்தம் காட்டி அருள் பாலிக்கும் எண்கை துர்க்கை அன்னை.

வளைகாப்பு மண்டபம்

திட்டி வாசல் தூண்களில் துர்க்கை

ஒன்று போலத் தோன்றினாலும் சிறு வேறுபாடுகள் உள்ளன. 








காண்க:

1 கருத்து:

  1. "அவுணன் தலைமிசை நின்ற தையல்" - லில் கொற்றவை போர் புரியும் கற்சிலைகள் வெவ்வேறு காலகட்டத்திலும் பெரிய மாறுதல் இல்லாமல் காட்சி ஒற்றுமையை கொண்டிருப்பது வியப்பு.

    சிலப்பதிகார ஒப்பீடு மேலும் சிறப்பு.

    கோவில்களுக்கு செல்லும் போது கற்சிலைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது கட்டுரை.

    அருமையான முயற்சி.
    🙏

    பதிலளிநீக்கு